Home இலங்கை NPP உறுப்பினர்களுக்கு எதிராக சுகிர்தன் பகிரங்க குற்றச்சாட்டு

NPP உறுப்பினர்களுக்கு எதிராக சுகிர்தன் பகிரங்க குற்றச்சாட்டு

0
image

ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களின் தலைமையிலான குழு மதுபோதையில் வீடு புகுந்து மேற்கொண்ட தாக்குதலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“நேற்றுமுன்தினம் நெல்லியடியில் வயதான ஓய்வுநிலை அரச உத்தியோகத்தரின் வீட்டின் மீது தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தெற்கு மேற்கு மற்றும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்களின் தலைமையிலான குழு மதுபோதையில் மேற்கொண்ட அடாவடித்தனமான தாக்குதல் சமூகத்தில் மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தச் சம்பவம் கடந்த கால ஆட்சியாளர்களின் மோசமான நடவடிக்கைகளை மீண்டும் நினைவூட்டுகின்றன. தற்போதைய ஆட்சியிலும் நாட்டின் பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் பொலிஸார் எத்தகைய அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

நாட்டின் ஜனாதிபதி இந்தச் சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு வடக்கில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும்.” – என்றுள்ளது. 

Source: https://samugammedia.com/sukirtan-makes-public-accusations-against-npp-members-1788187037

NO COMMENTS

Exit mobile version