சித்திரை புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மற்றும் நுவரெலியா நானுஓயா பகுதிகளுக்கு சுற்றுலா சென்றவர்கள் மீண்டும் கொழும்பு நோக்கி செல்வதற்கு முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பதுளையிலிருந்து இன்று(17.04.2025) காலை கொழும்பு கோட்டைக்கு இயக்கப்பட்ட தொடருந்துக்கு ஏராளமான பயணிகள் காத்திருந்தனர்.
எனினும், வருகை தந்த தொடருந்தில் அனைவருக்கும்
இடவசதி இல்லாமல் கொழும்பு செல்ல எதிர்பார்த்திருந்த ஏராளமான பயணிகள்
சிரமத்திற்கு ஆளாகினர்.
பாதுகாப்பற்ற வகையில் பயணம்
பண்டிகை விடுமுறை முடிந்து மீண்டும் தொழில் நிமித்தம் கொழும்பு திரும்பும்
பயணிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதனால், நானுஓயா தொடருந்து நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டைக்கு செல்வதற்கு அதிகமான
பயணிகள் வருகைத்தருவதால் பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அதிக பயணிகள் நானுஓயாவிற்கு வருகை தந்ததன் காரணமாக தொடருந்து சேவையினை
பயன்படுத்தும் பயணிகள் பாதுகாப்பற்ற வகையில் தொடருந்து மிதிபலகையில் நின்றவாறு
பயணம் செய்தமையை அவதானிக்க முடிந்தது.
நுவரெலியா மற்றும் நானுஓயா உள்ளிட்ட சுற்றுலா பிரதேசங்களில் இருந்து பதுளை
எல்ல பகுதியை நோக்கி செல்லதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நானுஓயா
புகையிரத நிலையத்தில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
