நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண கால நிலை காரணமாக அதிகலவான மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளதோடு தம்மை காப்பாற்றுமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க விமானப்படையின் உதவியை நாடியுள்ள
போதும்,சீரற்ற காலநிலை காரணமாக குறித்த நடவடிக்கைகளும் இது வரை கைகூடவில்லை என
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்திற்கான இரு முக்கிய பாதைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக அதிகளவான மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்திற்காண இரு முக்கிய பாதைகளான
மன்னார் – மதவாச்சி பிரதான பாதை மற்றும் மன்னார் யாழ்ப்பாணம் பிரதான பாதை ஆகியவை
வெள்ள நீர் காரணமாக போக்கு வரத்துக்கள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மன்னார் மாவட்டம் ஏனைய மாவட்டங்களுடனான தொடர்புகள்
துண்டிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள மக்களை வெளியேற்ற முடியாத நிலையும்
காணப்படுகின்றது.
தற்போது பெய்து வருகின்ற மழை மற்றும் வேறு மாவட்டங்களில் இருந்து குளங்களின்
மேலதிக நீர் ஆகியவை பெருக்கெடுத்து மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களை
தனித்து விட்டுள்ளது.
இதன் காரணமாக கூராய் மற்றும் குஞ்சுக்குளம் போன்ற பகுதிகளில் பல மக்கள்
தனித்து விடப்பட்டுள்ள நிலையில் தம்மை காப்பாற்றுமாறு கூறி இருக்கின்றார்கள்.
அவர்களை படகு மூலம் அழைத்துச் செல்வதற்கு அதிக அளவான நீர் ஓட்டம் காரணமாக
குறித்த நடவடிக்கை மிகவும் கடினமானதாக காணப்படுகின்றது.இதனால் பாதிக்கப்பட்ட
மக்களை மீட்க விமானப்படையின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பல பாகங்களில் வெள்ள நீர்
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட காற்றுடன் கூடிய மழை காரணமாகவும், ஏற்பட்ட
வெள்ளப்பெருக்கு காரணமாக வும் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும்
ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
நானாட்டான், மடு, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில்
ஆடு மற்றும் மாடு உள்ளடங்களாக ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில்
அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
குறிப்பாக நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆயிரக்கணக்கான
கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள்
கவலை தெரிவித்துள்ளனர்.
எனினும் அவர்களினால் இயன்ற அளவிற்கு வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட கால்நடைகளை காப்பாற்றி படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்து காப்பாற்றி உள்ளனர்.
மேலும் மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்பதோடு
பிரதான பாதைகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
