வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில்
கிரவல் அகழ்வதை தடைசெய்ய கோரி பொதுமக்களால் இன்று(21.12.2025) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
செட்டிகுளம், கங்கன்குளம் பகுதியில் போராட்டத்தை ஆரம்பித்த மக்கள் அங்கிருந்து
3 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள செட்டிகுளம் பிரதேச செயலகம் வரை பேரணியாக
சென்று அங்கு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பொதுமக்கள், கிரவல் அகழ்வால் எமது கிராமமே குன்றும்
குழியுமாக உள்ளது. எனவே கிராம மக்களின் விருப்பத்திற்கு மாறாக கிரவல்
அகழ்விற்கான அனுமதியை வழங்குவதை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.
அடக்கு முறை
அத்துடன் சுற்றுச் சூழலையும் வளங்களையும் அழித்து அதற்கு எதிராக குரல்
எழுப்பும் மக்களின் மீது அடக்கு முறைகளை பிரயோகிக்க வேண்டாம்.
கிரவல்
அகழ்விற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை கைது செய்யாதே. எமது கிராமத்தை
காப்பாற்ற அரச அதிகாரிகள் முன்வர வேண்டும் என தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ”இயற்கையை அழிக்காதீர்கள், சட்டவிரோத கிரவல்
அகழ்விற்கு தடை விதியுங்கள், எமது கிராமத்தின் வளங்கள் சுரண்டலுக்கு
மாத்திரமா’ போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களை
எழுப்பியிருந்தனர்.
உரிய நடவடிக்கை
போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் போராட்டக்காரரின் கோரிக்கை தொடர்பில்
அவர்களுடன் கலந்துரையாடியதுடன், அவர்களது மனுவையும் பெற்றுக் கொண்டார்.
அத்துடன் இது தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை அரசாங்கத்தால்
எடுக்கப்படும் எனவும் இதன்போது அவர் உறுதியளித்திருந்தார்.
