ஏறாவூர் மயிலம்பாவெளி பகுதி பிராதன வீதியில் மதுபோதையில் சிவில் உடையில்
மோட்டார் சைக்கிள் ஒன்றில் பிரயாணித்த இரு பொலிஸார் வர்த்தகர் ஒருவரை நிறுத்தி அவர் மீது தாக்குதல்
நடாத்தியதில் படுகாயமடைந்த வர்த்தகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்ட இரு
பொலிஸாரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
தலைக்கவசத்தால் வர்த்தகர் மீது தாக்குதல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வந்தாறுமூலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த
வர்த்தகர் ஒருவர் ஏறாவூர் மயிலாம்பாவெளி பகுதியிலுள்ள கிராம
சேவகர் காரியாலயத்துக்கு முன்னால், மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி
சென்றதையடுத்து, தாம் பொலிஸ் நீ பிழையாக மோட்டார் சைக்கிள்
செலுத்துவதாக தெரிவித்து, இரு பொலிஸார் தமது
தலைக்கவசத்தால் வர்த்தகர் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.
தாககுதலில் குறித்த நபர் படுகாயம் அடைந்தார்.
இதனை தொடர்ந்து அங்கு பொதுமக்கள் கூடி பொலிஸாரை அங்கிருந்து செல்லவிடாது
தடுத்து நிறுத்தி பொலிஸ் அவசர இலக்கமான 1919 தோலைபேசி இலக்கத்துக்கு
அறிவித்ததையடுத்து அங்கு ஏறாவூர் பொலிசார் முச்சக்கரவண்டியில் வந்து விசாரணையை
மேற்கொண்டனர்.
இதன்போது தாக்குதலை நடாத்திய பொலிஸார் இருவரும் மதுபோதையில் இருப்பதை
கண்டுபிடித்த பொலிஸார் அவர்கள் இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தை அண்மித்ததும் குறித்த பொலிஸார் இருவரும் பொலிஸ்
நிலையத்துக்கு செல்லாமல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இந்நிலையில், இரு பொலிஸாரும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற பிரிவில்
கடமையாற்றி வருவதோடு, சம்பவதினமான நேற்று காலை 11.00 மணிக்கு நீதிமன்ற
பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகிவரும் இருவரை கைது செய்வதற்காக கடமை
கையேட்டில் கையொப்பம் இட்டுவிட்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து
வெளியேறியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மது போதையில் தாக்குதலை மேற்கொண்ட இரு பொலிஸாருக்கு எதிராக
பாதிக்கப்பட்ட வர்த்தகர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை
ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
