கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்துமாறு கோரி மாவட்ட அரச அதிபருக்கு கிளிநொச்சி மாவட்ட அதிபர்
சங்கம் சார்பில் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டத்தில் அண்மைய நாட்களாக அதிகரித்து வரும் வழிப்பறி
கொள்ளைகள் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும்
தங்களது பாதுகாப்புகளை உறுதிப்படுத்துமாறு கோரியும் கிளிநொச்சி மாவட்ட
அதிபர்கள் சங்க பிரதிநிதிகள் நேற்று (24.02.2025) கிளிநொச்சி மாவட்ட அரச
அதிபர் அவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் தங்களது கோரிக்கை அடங்கிய
மனு ஒன்றினையும் கையளித்துள்ளனர்.
அதிபர் ஆசிரியர்களை இலக்கு வைத்து..
அண்மையில் கிளிநொச்சி பூநகரி பகுதியைச் சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர்
தனது பாடசாலைப் பணிகளை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பூநகரி சங்குப்பிட்டி வீதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு குறித்த அதிபர்
உயிரிழந்தமை.
நேற்று முன்தினம் கிளிநொச்சி திருவையாறு பகுதியில்
பாடசாலை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியரது தங்கச்
சங்கிலி அறுத்தெடுக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிபர் ஆசிரியர்களை இலக்கு வைத்து இடம்பெறுகின்றன.
இவற்றை கண்டித்து உரிய பாதுகாப்பை பெற்று தருமாறு கோரியே மாவட்ட அரச அதிபர்
சு.முரளிதரனை கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்க பிரதிநிதிகள்
சந்தித்து கலந்துரையாடியதுடன் தங்களது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றையும்
கையளித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாவட்ட அதிபர் இவ்வாறான சம்பவங்கள்
தொடர்பில் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்புடன் கலந்து ஆலோசிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
