Home இலங்கை சமூகம் கதிர்காமம் காட்டுப்பாதையை திறக்க யாத்திரிகர்கள் கோரிக்கை

கதிர்காமம் காட்டுப்பாதையை திறக்க யாத்திரிகர்கள் கோரிக்கை

0

கதிர்காமத்திற்கு காட்டுப்பாதை வழியாக உகந்தையிலிருந்து செல்லும் பாதை
எதிர்வரும் 30ஆம் திகதி திறப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில்
அதனை எதிர்வரும் 2ஆம் திகதி திறப்பதற்குத் தீர்மானித்துள்ளதால் தாம் வெகுவாக மனமுடைந்துள்ளோம் என யாழ்ப்பாணத்திலிருந்து
கால்நடையாக கதிர்காமம் நோக்கிச் செல்லும் யாத்திரிகர் குழுவினர்
தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கிச் செல்லும் 90
நபர்பளைக் கொண்ட யாத்திரிகர் குழு நேற்று (13.06.2024) மாலை மட்டக்களப்பு
தேற்றாத்தீவு கொம்புச்சந்தி ஆலயத்தை சென்றடைந்த நிலையில் அக்குழுவினர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். 

பாதையைத் திறப்பதற்கான நடவடிக்கை

தேற்றாத்தீவு கொம்புச்சந்தி ஆலயத்திலிருந்து புறப்பட்ட யாத்திரிகர்கள் களுதாவளை
சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்திற்குச் சென்றனர்.

இந்நிலையில் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வீதியில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சந்தித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினரிடமும்
தமது கோரிக்கையை அவர்கள் தெரிவித்தனர்.

இவ்விடயம் குறித்து தான் கிழக்கு மாகாண
ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும்,
எதிர்வரும் 30ஆம் திகதியே காட்டுப்பாதையைத் திறப்பதற்கு உரிய நடவடிக்கை
எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

கொடியேற்ற நிகழ்வு

இதற்காக எதிர்வரும் 20ஆம்
திகதி மாலை 3 மணிக்கு அம்பாறை கச்சேரியில் கூட்டம் ஒன்று ஒழுங்கு
செய்யப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் யாத்திரிகர்களிடத்தில்
தெரிவித்தார்.

எதிர்வரும் 30ஆம் திகதி காட்டுப்பாதை திறக்கப்படும் பட்சத்திலேயே அடுத்த மாதம் 06ஆம் திகதி (06.07.2024) அன்று கதிர்காம ஆலய கொடியேற்ற நிகழ்விற்குச் செல்ல முடியும்.

மாறாக 02ஆம் திகதி (02.07.2024) அன்று காட்டுப்பாதை திறந்தால் அது கொடியேற்ற நிகழ்விற்குச் செல்ல
முடியாமல்போகும்.

எனவே 30ஆம் திகதியே பாதையைத் திறப்பதற்குரிய முடிவை
தீர்க்கமாக மேற்கொண்டு தருமாறு யாத்திரிகர்கள் மேற்படி நாடாளுமன்ற
உறுப்பினர் சாணக்கியனிடம் வலியுறுத்தினர்.

NO COMMENTS

Exit mobile version