இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(14) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சீதுவை – ரத்தொலுகம பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
கைது செய்யப்பட்டவர் ரத்தொலுகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆவார்.
சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள், போக்குவரத்து விதி மீறல் குற்றத்திற்காக முறைப்பாட்டாளரின் வாகன அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொண்டு, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக முறைப்பாட்டாளரிடம் 3 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று (15) முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
