தம்புள்ளை அருகே வனப்பகுதியொன்றில் கர்ப்பிணி மான் ஒன்றை வேட்டையாடிய இரண்டு பொலிஸார் உள்ளிட்ட நான்கு பேரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புள்ளை மாஜிஸ்திரேட் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தம்புள்ளை அருகே உள்ள கலேவெல – கலாவெ வீதியின் மகுலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள ஹீனுகடகல வனப்பகுதியில் கர்ப்பிணி மான் ஒன்றை வேட்டையாடிய சம்பவம் தொடர்பிலேயே தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சந்தேக நபர்களில் ஒருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.
குற்றச்சாட்டுகள்
கர்ப்பிணி மானைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட மூன்று துப்பாக்கிகளை தம்புள்ளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மீது சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்தமை மற்றும் வனப்பகுதியில் உள்ள ஒரு மானை சுட்டுக் கொன்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
