புலனாய்வு விசாரணைகளின் போது சந்தேகநபருக்கோ அல்லது பாதிக்கப்பட்டவருக்கோ உள ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தீங்கு ஏற்படாத வண்ணம் விசாரணைகள் செய்யப்படவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரவதையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தையொட்டி பொலிஸ் அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வு கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற போது தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்க்கையில்,
மனித உரிமை மீறல் சம்பவம் என்பது ஆரம்பமும், முடிவும் உள்ள ஏதோவொரு நிகழ்வாகும்.
அது தனி நிகழ்வாக, தொடர் நிகழ்வாக. பலர் இணைந்து இடம்பெறும் கூட்டு நிகழ்வாக இருக்கலாம்.
இதனை பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு செய்கின்ற போது துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு மேலும் மீறல்கள் ஏற்படாத வகையில் பொலிஸார் செயற்படவேண்டியது அவர்களின் கடமையிலான பணியாகும்.
முறைப்பாடு செய்ய நிலையத்திற்கு வருபவர்களை அன்போடு ஆதரித்து வார்த்தைப் பிரயோகங்களை எவரது மனமும் புண்படாத வகையில் பாவிக்கவேண்டும்.
இது மனித கௌரவத்தை பாதுகாக்கும் என்பதால் சித்திரவதைக் கலாச்சாரம் இல்லாதொழிப்பதற்கு அனைவர்களும் முன் வந்து செயற்படவேண்டும். என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின் போது கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையைச் சேர்ந்த வைத்தியகலாநிதி. எம்.ஏ.சி.எம். பசால், மனித உரிமைகள் அதிகாரி பி.எம்.எம். பெறோஸ் ஆகியோர் விரிவுரையாற்றினர்.