Home இலங்கை குற்றம் யாழில் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்க வந்தவர்களை அச்சுறுத்திய பொலிஸார்

யாழில் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்க வந்தவர்களை அச்சுறுத்திய பொலிஸார்

0

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக
சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்ட
சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக வலிவடக்கு காணிகள்
விடுவிப்புக்கான அமையம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் வசாவிளான் சந்தியில்
ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (17) நடைபெற்றது.

காணி விடுவிப்பை வலியுறுத்தி ஊடக சந்திப்பு

ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்னதாக அங்கு வந்த பலாலி பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களுடன்
தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது உயர் பாதுகாப்பு வலயம் எனவும் இங்கு கூட்டம் கூட முடியாது எனவும் ஊடக
சந்திப்பு ஏற்பாட்டாளர்களுடன் பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முரண்பாட்டில்
ஈடுபட்டுள்ளார்.

தாம் எமது காணி விடுவிப்பை வலியுறுத்தி ஊடக சந்திப்பை நடாத்தவே வந்ததாகவும் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காணொளி மற்றும் புகைப்படங்களை எடுத்து..

இதனையடுத்து அங்கு ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களின் தேசிய அடையாள அட்டையை
வாங்கி பெயர்களை பதிவு செய்த பொலிஸார் அங்கு ஊடகங்களுக்கு கருத்து
தெரிவித்தவர்களை காணொளி மற்றும் புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தும் வகையில்
செயற்பட்டுள்ளனர். 

இவற்றை காணொளியை எடுத்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் மற்றும் பொலிஸ்
புலனாய்வாளர்கள் அச்சுறுத்தும் வகையில் காணொளி எடுத்துள்ளனர்.

மேலும், ஊடகவியலாளர் சந்திப்பை முடித்து விரைவாக செல்லுமாறு அங்கு வந்திருந்தவர்களுடன்
பொலிஸார் தொடர்ச்சியாக தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/police-threaten-request-to-the-president-in-jaffna-1744875809

NO COMMENTS

Exit mobile version