ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மத்திய கிழக்கின் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாடில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்வதாக அந்த அமைச்சு அறிக்கை தெரிவித்துள்ளது.
முதலீடு தொடர்பான ஒப்பந்தங்கள்
ஜனாதிபதியின் குறித்த விஜயத்தின் போது எரிபொருள் மற்றும் எரிவாயு கொள்முதல், மின்சாரம் மற்றும் எரிசக்தி திட்டங்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையில் ஒரு கூட்டு ஆணையத்தை உருவாக்குவது இந்த விஜயத்தின் மற்றொரு சிறப்பம்சமாக இருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெப்ரவரியில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் திட்டங்களை எடுத்துரைத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையின் எரிசக்தி மற்றும் பொருளாதாரத் துறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
