இனிவரும் காலங்களில், தேசிய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, சிறையில்
அடைக்கப்பட்டுள்ளவர்களின், சிறைத் தண்டனையை குறைப்பதற்காக நீதி அமைச்சகம்,
இறுக்கமான நிபந்தனைகளை அறிமுகப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகளை விடுவிப்பதில் கண்டறியப்பட்ட முறைகேடுகளைத் தொடர்ந்து இந்த செயற்பாடு
நடைமுறைக்கு வரவுள்ளது.
முறைகேடுகள்
தேசிய சுதந்திர தினம், வெசாக் மற்றும் கிறிஸ்மஸ் போன்ற நிகழ்வுகளின் போது
இலங்கையில் சிறைக்கைதிகளின் தண்டனைகள் குறைக்கப்பட்டு, அவர்கள் ஜனாதிபதி
பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்ககப்படுகின்றமை வழமையாகும்.
ஜனாதிபதியின் அங்கீகாரத்தின் பேரில் சிறை அதிகாரிகளால் விடுவிக்கப்பட வேண்டிய
கைதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோலை நீதி அமைச்சகம் உருவாக்குகிறது.
எனினும், இனிவரும் காலங்களில், ஜனாதிபதியின் ஒப்புதலின் கீழ் கைதிகளை
விடுவிப்பதற்கான புதிய அளவுகோல்களை உருவாக்க ஒரு குழுவை நியமிக்கவுள்ளதாக
நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
