சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு இன்று (21) நுவரெலியா – பதுளை பிரதான
வீதியில் நுவரெலியா மாநகரசபை மண்டபத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கவனயீர்ப்பு போராட்டம் சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் அதன் நிறைவேற்று பணிப்பாளர் பெரியசாமி முத்துலிங்கம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
சர்வதேச தேயிலை தினத்தையொட்டி கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகமான (ISD)
நிறுவனத்தின் ஏற்பாட்டில் மலையக பெருத்தோட்ட தொழிலாளர்களின் மறுக்கப்பட்ட
பல்வேறு உரிமை சார் விடயங்களை உள்ளடக்கி தமது கோரிக்கைகள் அடங்கிய வசனங்கள்
பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியும் குறித்த
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பள பிரச்சினை
இதன் போது ஊடகங்களுக்கு சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் நிறைவேற்று பணிப்பாளர்
மற்றும் உறுப்பினர்கள் கருத்து கூறுகையில், தேயிலை செடிகளை நம்பி தமது
வாழ்க்கையை அர்ப்பணிக்கும் தொழிலாளர்கள் இன்னும் கொத்தடிமைகளாகவும்,
அபிவிருத்தியை காணாதவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு எப்போது
விடிவு கிடைக்கும். இன்றும் அந்த மக்களின் சம்பள பிரச்சினை தொடர்கிறது, காணி
பிரச்சினை தொடர்கிறது, வீட்டு பிரச்சினை தொடர் கதையாக உள்ளது.அந்த மக்கள்
வாழும் வீடுகளில் சிறியளவான புனரமைப்பு செய்வதற்கும் தோட்ட நிர்வாகத்தின்
அனுமதி பெறப்பட வேண்டும்.
அவ்வாறு புனரமைக்கப்படும் வீடுகளை பெருந்தோட்ட
மக்களின் சொந்த வீடுகளாக கருதவும் முடியாது.இதில் தற்போது புதிதாக மாடி
வீட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இது எங்களது மக்களுக்கு
சாத்தியமற்ற ஒன்றாகவே கருதுகின்றோம்.
எனவே ஏனைய மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள்
அனைத்துமே எங்களது மக்களுக்கும் பாரபட்சம் இன்றி கிடைக்க வேண்டும். இதற்காக
நாங்கள் எந்த வழியிலும் போராட தயாராக உள்ளோம் எனத் தெரிவித்தனர்.
