Home இலங்கை சமூகம் இரத்மலானை அரச விடுதி விவகாரம் விசாரணைகள் முடிவு

இரத்மலானை அரச விடுதி விவகாரம் விசாரணைகள் முடிவு

0

இரத்மலானை அரசினர் விடுதியில் மது போதையில் அசாதாரணமாக நடந்து கொண்ட
அதிகாரிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள்
முற்றுப்பெற்று தொடர் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக
வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், குறித்த அதிகாரிகளின் பெயர் பதவி நிலைகளை கோரிய தகவல் கோரிக்கை
படிவம் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முடிவுறுத்தப்படும் வரையில்
மறுக்கப்பட்டுள்ளதாக பிரதம செயலாளர் அலுவலகம் எழுத்து மூலம் குறிப்பிட்டுள்ளது.

இரத்மலானை அரச விடுதி

கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் க.பொ.த உயர் தரப் பரீட்சை கூட்டத்திற்கு சென்ற கல்வி உயர்
அதிகாரிகள் சிலர் இரத்மலானை அரசினர் சுற்றுலா விடுதியில் மது போதையில்
அசாதாரணமாக நடந்து கொண்டமை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிரதம
செயலாளர் அலுவலகம் வடமாகாண கல்வி அமைச்சுக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பி
இருந்தது.

வடமாகாண கல்வி அமைச்சு குறித்த விடயம் தொடர்பாக வடமாகாண கல்வித்
திணைக்களத்திடம் விளக்கம் கோரிய நிலையில் உரிய காலப் பகுதியில் வட மாகாண
கல்வித் திணைக்களம் கல்வி அமைச்சுக்கு பதிலளிக்கவில்லை.

இந்நிலையில் வட மாகாண பிரதம செயலாளர் நிர்வாகம் குறித்த விடயம் தொடர்பான
விசாரணை அறிக்கை கிடைக்க பெறும் வரை எந்த ஒரு அதிகாரிகளும் இரத்மலானை அரச
விடுதியை பயன்படுத்த தடை விதித்து எழுத்து மூலம் கடிதம் அனுப்பி இருந்தது.

இந்நிலையில் மாகாண கல்வி பணிப்பாளராக இருந்த யோன் குயின்டரஸ் பணியிடமாற்றம்
பெற்று கொழும்புக்குச் சென்ற நிலையில் புதிய மாகாண கல்வி பணிப்பாளரின் கீழ்
விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகளின் இரத்மலானை அரச
விடுதியில் அசாதாரணமாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீதான விசாரணைகள் முடிவுக்கு
வந்த நிலையில் தொடர் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த ஒழுக்காற்று விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட அதிகாரிகள் தொடர்பான
விபரங்களை தருமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வடமாகாண பிரதம
செயலாளர் அலுவலகத்திற்கு கேட்கப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பாக
நடவடிக்கையில் உள்ளதால் அதிகாரிகளின் பெயர் விபரங்களை வெளியிட பிரதம செயலாளர்
செயலகம் மறுத்துள்ளது.

இரத்மலானை அரச ஓய்வு விடுதியில் மது போதையில் அசாதாரணமாக நடந்து கொண்ட
அதிகாரிகள் தொடர்பான விசாரணை இரண்டு வருடங்களாக இடம்பெற்று வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version