Home இலங்கை அரசியல் விவசாயிகளின் உர மானியத்தை நிறுத்தினால் காத்திருக்கும் அபாயம்

விவசாயிகளின் உர மானியத்தை நிறுத்தினால் காத்திருக்கும் அபாயம்

0

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்ட உர மானியத்தை இடைநிறுத்த வேண்டாம் என முன்னாள் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளை சந்தித்த போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் சட்டத்தின் கீழ் உர மானியத்தை பொதுத் தேர்தல் முடியும் வரை இடைநிறுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அரிசி தட்டுப்பாடு 

இந்த நிலையில், உர மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் இல்லை என்றால் அடுத்த பருவத்தில் நெல் அறுவடை குறைவடைந்து அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகும் என மகிந்த அமரவீர எச்சரித்துள்ளார்.

இந்த பருவத்தில் 15,000 ரூபாவாக இருந்த உர மானியத்தை 25,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் சபை தீர்மானித்ததாகவும், ஜனாதிபதி தேர்தலின் பின்னர், ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அதனை நடைமுறை படுத்த புதிய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் மகிந்த அமரவீர தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில், முன்னாள் அமைச்சர் லசந்த அழகியவன்ன, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார ஆகியோரும் கலந்துகொண்டனர். 

Source: https://ibctamil.com/article/request-fertilizer-subsidy-for-farmers-sri-lanka-1727870703

NO COMMENTS

Exit mobile version