Home இலங்கை அரசியல் மன்னார் மதுபானசாலை தொடர்பில் ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

மன்னார் மதுபானசாலை தொடர்பில் ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

0

மன்னார் பிரதான வீதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கான அனுமதியை இரத்து செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayake) கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கோரிக்கையை கடிதமொன்றை அனுப்பியதன் மூலம் அவர் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார்.

குறித்த மதுமானசாலை அமைக்கப்பட்டுள்ள இடமானது, பாடசாலைகள், ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த மாதம் கூட ஒரு போராட்டத்திற்கு வழிவகுத்ததாகவும் பதியுதீன் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்கள் எதிர்ப்பு

எவ்வாறாயினும், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அத்தோடு, அரசியல் காரணங்களுக்காக இந்த மதுபானக் கூடத்திற்கான அனுமதி கடந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்டதாகவும் ரிஷாட் பதியுதீன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அந்த கடிதத்தில், “இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட்டு, இந்த மதுபானக் கூடத்திற்கான அனுமதியை ரத்து செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

குடியிருப்பாளர்களின், குறிப்பாக இளம் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், மேலும் நாங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைக்கிறோம்.” என பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/request-to-cancel-mannar-liquor-permit-to-anura-1727335406

NO COMMENTS

Exit mobile version