Home இலங்கை அரசியல் மக்களின் ஆணையை மீறி கட்சி தாவியோருக்கு தேர்தலிலே தீர்ப்பு: ரிஷாட் பதியுதீன்

மக்களின் ஆணையை மீறி கட்சி தாவியோருக்கு தேர்தலிலே தீர்ப்பு: ரிஷாட் பதியுதீன்

0

மக்களின் ஆணையை மீறி கட்சியின் கட்டுக்கோப்பை உடைத்துக்கொண்டு, வேறு
கட்சிகளில் இணைந்தோரால் எந்த பாதிப்பும் ஏற்படாதென அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை(10) மதியம் நடைபெற்ற மக்கள் சந்திப்பில்
ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

 

சஜித் பிரேமதாசவுக்கு கணிசமான வாக்குகள்

“எமது கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒரு சிலரும்,
தவிசாளர் ஒருவரும் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவுமே எமது கட்சி, மக்களின் ஆணையை
கோரியது. இதனால் சஜித் பிரேமதாசவுக்கு கணிசமான வாக்குகளை எமது கட்சி
பெற்றுக்கொடுத்தது.

நாடாளுமன்றத்தில் நான்கு எம்.பிக்களைப் பெறுமளவுக்கு எமது கட்சிக்கு மக்களின்
ஆணை கிடைத்தது. இந்த ஆணையை மீறி, இந்த எம்.பிக்கள் ரணில் விக்ரமசிங்கவுடன்
இணைந்துள்ளனர். இவர்களைப் பின் தொடர்ந்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்
சிலரும் கட்சி மாறிவிட்டனர்.

மக்களின் ஆணைகளை மீறிய இவர்களை மன்னிக்கவே முடியாது. எதிர்வரும் காலங்களில்
இவர்களை மீண்டும் எம்முடன் இணைக்கப்போவதில்லை. இவர்கள் சென்றதால் கட்சியின்
வளர்ச்சியில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

மக்களின் ஆர்வம் 

எதிர்வரும் நாடாளுமன்றத்
தேர்தலில் பத்து எம்.பிக்களைப் பெறுவோம். அந்தளவுக்கு மக்களின் ஆர்வம்
அதிகரித்துள்ளது.

கோட்டாபயவின் சகாக்களைப் பாதுகாக்கவே இவர்கள் ரணிலுடன் இணைந்துள்ளனர்.

கடந்த கால
ஊழல்வாதிகளும், அமைச்சர்களும் தங்களைப் பாதுகாப்பதற்கே, ரணிலை வெல்ல வைக்கப்
பார்க்கின்றனர். சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவர்.

ரணில் விக்ரமசிங்கவும் அனுரகுமார திஸாநாயக்கவும் இரவில் இரகசியமாக
பேசிக்கொள்கின்றனர். வெவ்வேறாகப் போட்டியிடுவோர் ஏன் பேச வேண்டும்? வெற்றியைத்
தக்கவைப்பதற்கான வழிகளையே இவ்விருவரும் ஆராய்கின்றனர்.

அனுர ஆட்சிக்கு
வந்தால், ஆறு மாதங்களில் மீண்டும் ஜனாதிபதியாகலாமென ரணில் நினைக்கிறார். இவை
எதுவும் நடக்காது.

சிங்களப் பகுதிகளில் எந்த எதிர்ப்புக்களும் இன்றி கூட்டங்களில் பங்கேற்கிறேன்.

ஐ.எஸ்.ஐ.எஸ் என்று எனக்கு வழக்குத் தொடுத்தனர். வாக்களிப்பதற்காக பஸ்களில்
மக்களைக்கொண்டு வந்ததாகக் குற்றம் சுமத்தினர். இந்தக்
குற்றச்சாட்டுக்களிலிருந்து நீதிமன்றம் என்னை நிரபராதி எனத் தீர்ப்பளித்தது.
இதனால்,சிங்கள மக்கள் என்னை நம்புகின்றனர்” என்று கூறியுள்ளார்.

Source: https://tamilwin.com/article/rizad-election-speech-mannar-1725977522

NO COMMENTS

Exit mobile version