டிட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகளை மீண்டும்
பயன்பாட்டுக்குரிய நிலையில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர்
பிமல் ரத்நாயக்க தலைமையில் விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நேற்று (16) மாலை
மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
விரிவாக ஆராயப்பட்ட விடயம்
இதன்போது, டிட்வா புயல் வெள்ளத்தால் கடுமையாக
சேதமடைந்த வீதிகளுக்கு விசேட கவனம் செலுத்தி மேற்கொள்ள வேண்டிய திருத்தம்
மற்றும் அபிவிருத்தி பணிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக குஞ்சுகுளம் வீதி, முள்ளிக்குளம் – பள்ளமடு வீதி, பரப்புக்கடந்தான்
வீதி ஆகிய வீதிகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த வீதிகள் தொடர்பில், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள
வீதிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பிலுள்ள வீதிகள் மற்றும்
உள்ளூராட்சி சபைகளின் கீழ் பராமரிக்கப்படும் வீதிகள் ஆகிய அனைத்தையும்
உள்ளடக்கி விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவதானம் செலுத்தப்பட்ட தகவல்கள்
இந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள வீதி அபிவிருத்தி திட்டங்கள்,
அடுத்த ஆண்டில் முன்னெடுக்க திட்டமிடப்பட்ட புதிய வீதி திட்டங்கள்,
அவற்றுக்கான தேவையான நிதி ஒதுக்கீடுகள், பணிகளுக்கான காலக்கெடு மற்றும் செயல்படுத்தும் அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் தொடர்பான விடயங்களும் இதன்போது அவதானிக்கப்பட்டன.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், மாவட்ட
அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், திட்டமிடல் பணிப்பாளர், மாகாண வீதி அபிவிருத்தி
அதிகாரசபை பணிப்பாளர், சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
