Home இலங்கை பொருளாதாரம் அரச – தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

அரச – தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

0

தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு அமைய அரச மற்றும் தனியார் துறை சேவையாளர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வலியுறுத்தியுள்ளது.

மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, நாட்டின் பொருளாதார மீட்சிக்கு மத்தியில் அரச மற்றும் தனியார் துறை சேவையாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இயலுமை காணப்படுகிறதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர் பற்றாக்குறை

மேலும், 2024 ஆம் ஆண்டு முதலிரு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி சாதகமான நிலையில் உள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டு வரை முதன்மை பணவீக்கம் குறைவானதாக பேணப்படும் என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அரசியல் ரீதியான நிச்சயமற்ற தன்மை பொருளாதார மீட்சியின் மீதான பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதுடன், திறமைசாலிகளின் உயர்ந்தளவான வெளியேற்றமானது தொழிலாளர் பற்றாக்குறைகளுக்கும், குறைந்த உற்பத்தித் திறனுக்கும் வழிவகுக்கும், இது பொருளாதார வளர்ச்சித் தோற்றப்பாட்டிற்கான இடர்நேர்வாக அமையும் என்றும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

ஆட்சி மாற்றம்

அத்துடன், 2025 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் உயர்வடைந்துள்ள பணவீக்கத்தை 5 வீதம் நிலையாக உறுதிப்படுத்த எதிர்பார்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போதைய வாழ்க்கை செலவு உயர்வுக்கும், ஊழியர்களின் சம்பள வீதத்துக்கும் இடையில் நீண்ட இடைவெளி காணப்படுவதாகவும் சம்பள அதிகரிப்பு நாணய கொள்கை செயற்திட்டத்துக்கு பாதகமானதாக இருக்காது என்றும் இலங்கை மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.

மேலும், ஆட்சி மாற்றத்துக்கேற்ப பொருளாதாரக் கொள்கைகளை இனி மாற்றியமைக்க முடியாது எனவும் இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version