தெற்காசிய பிராந்தியத்தின் எரிபொருள் முனையமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான ஆரம்ப பணிகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தொடங்கியுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் கடந்த வாரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் தூதர்களுடன் நடத்தப்பட்டதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.
திருகோணமலை எண்ணெய் களஞ்சியத் தொகுதியை மேம்படுத்துதல் மற்றும் திருகோணமலையில் புதிய எண்ணெய் சேமிப்பு தொட்டிகளை நிர்மாணித்தல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
விரிவான கலந்துரையாடல்கள்
‘இலங்கையின் புவியியல் அமைவிடம் மற்றும் திருகோணமலை துறைமுகத்தின் சாதகங்களைக் கருத்தில் கொண்டு, பெட்ரோலியப் பொருட்களை சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதற்கான பிராந்திய மையமாக இலங்கை மாற முடியும்’ என்று ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான தொழில்நுட்ப விடயங்களைக் கையாளவும், விரிவான கலந்துரையாடல்களுக்காகவும் தொழில்துறை பிரதிநிதிகள் குழுக்கள் மேற்கண்ட நாடுகளில் இருந்து விரைவில் இலங்கைக்கு வருகை தர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://tamilwin.com/article/sri-lanka-as-the-fuel-hub-of-south-asia-1736731863
