Home இலங்கை சமூகம் கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

0

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 11ஆம் திகதி விசேட அமைச்சரவை கூடி கடவுச்சீட்டு தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.

இலத்திரனியல் கடவுச்சீட்டு

புதிய வழங்குனர் ஒருவரிடமிருந்து 750,000 புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை  கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலுக்கு கடந்த அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.

அதே நிறுவனத்திடம் இருந்து சாதாரண கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு முன்னாள் அமைச்சரவை தீர்மானித்தது, ஆனால் அதற்கு முன்னர் வழங்கிய வழங்குனர்கள், அவர்களின் ஒப்பந்தத்தின்படி கடவுச்சீட்டு அச்சிடுவதற்கு உரிமையுடையவர் என்பதால் பிரச்சினைகள் ஏற்பட்டது.

இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு 750,000 கடவுச்சீட்டுகளை வாங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அமைச்சரவைக் கூட்டம்

இந்த நிலையில், முந்தைய வழங்குனர் ஒரு குறிப்பிட்ட விலையில் கடவுச்சீட்டுகளை அச்சிட நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். மேலும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஒரு சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது முந்தைய வழங்குனரை தேவையான கடவுச்சீட்டுகளை தொடர்ச்சியாக வழங்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.

கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, புதிய கடவுச்சீட்டு வழங்கும் பணி திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், இந்த நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version