அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கையெழுத்தான, உடனடி போர்நிறுத்தத்தை ஏற்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இலங்கை அரசாகங்கம் வரவேற்றுள்ளது.
பிராந்திய மற்றும் உலகளாவிய ரீதியில் பதற்றத்தைக் குறைப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளதாக இலங்கை வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போர்நிறுத்த உடன்படிக்கையானது, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கான ஒரு சிறந்த கட்டமைப்பை வழங்குகிறது என்றும், உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான வழிவகைகளை உள்ளடக்கியுள்ளது என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சர்வதேசப் பங்காளிகளின் உதவி
இதேவேளை, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தின் மூலம் சர்வதேசப் பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதில் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கை, இந்த ஒப்பந்தம் பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் பங்களிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதில் முக்கிய பங்காற்றிய பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளுக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ள இலங்கை அரசு, இந்த இராஜதந்திர வெற்றியைப் பெற உதவிய அனைத்து சர்வதேசப் பங்காளிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
Source: https://ibctamil.com/article/sri-lanka-welcomes-us-iran-ceasefire-1781851415
