Home இலங்கை சமூகம் இலங்கையின் சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் குறித்து அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கையின் சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் குறித்து அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கை அரசாங்கம் நடத்தும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் கடந்தகாலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் தகாத செயற்பாடுகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமெரிக்கா (US) குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில், கடந்த 24ஆம் திகதி வெளியிடப்பட்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் 2024ஆம் ஆண்டுக்கான கடத்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில், சிறுவர்களை தகாத செயற்பாடுகளுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அரச சிறுவர் பராமரிப்பு இல்ல பணியாளர்களுக்கு எதிரான வழக்குகளில் எந்த முடிவுகளும் இல்லை என கூறப்பட்டுள்ளது. 

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் 

அத்துடன், 2021ஆம் ஆண்டில், 15 வயது சிறுமியை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கடற்படை அதிகாரி ஆகியோருக்கு எதிரான வழக்கில், இலங்கையின் சட்டமா அதிபர், போதிய ஆதாரங்கள் இல்லை என கூறிவிட்டார் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

இதற்கிடையில், இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்கு, சிறுவர்கள் கடத்தல் மற்றும் தகாத செயற்பாடுகள் தொடர்பில் 36 முறைப்பாடுகளே கிடைத்துள்ளன.

வழக்கு தாக்கல்கள் 

எனினும், பொலிஸாரின் தகவல்படி 128 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை அரசாங்கம் பாதுகாப்பான இல்லங்கள் மற்றும் சுமார் 331 சிறுவர் பராமரிப்பு நிறுவனங்களை நடத்துகிறது. 

அவை கடத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கு சேவைகளை வழங்குகின்றன எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version