இந்தியாவின் பீகார் மாநிலம், லக்கிசராய் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அசோக் தாம் ஆலயத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 6.45 மணியளவில் (17.08.08.2026) நடைபெற்றுள்ளது.
புனிதமான ஷ்ராவண மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமையை முன்னிட்டு சிவபெருமானை வழிபடுவதற்காக பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.
7 பேர் பலி
இதன்போது, அசோக் தாம் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள இந்திரமனேஷ்வர் ஆலயத்திற்குள் நுழைவதற்காக பக்தர்கள் பெருமளவில் திரண்ட நிலையில், கூட்டம் கட்டுப்பாட்டை இழந்து கடும் நெரிசல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நெரிசலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண் பக்தர்கள் என இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட தகவல்களின்படி, ஆலய வளாகத்தில் மின்சாரக் கம்பி ஒன்று அறுந்து விழுந்தமை பக்தர்களிடையே திடீர் பீதியை ஏற்படுத்தியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஏற்பட்ட பதற்றம் மற்றும் மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற அல்லது பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல முற்பட்டதன் காரணமாக நெரிசல் மேலும் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2019 ஆகஸ்ட் 12ஆம் திகதி, ஷ்ராவண மாதத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் ஒரு பக்தர் உயிரிழந்ததுடன், சுமார் 15 பேர் காயமடைந்திருந்தனர்.
இந்நிலையில், தற்போதைய சம்பவத்தைத் தொடர்ந்து ஆலயத்தின் பாதுகாப்பு மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Source: https://ibctamil.com/article/stampede-bihar-s-ashok-dham-temple-7-devotees-dead-1786939909
