Home இலங்கை சமூகம் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்!- வடக்கு மாகாணத்தில் கொட்டித்தீர்க்கும் மழை

வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்!- வடக்கு மாகாணத்தில் கொட்டித்தீர்க்கும் மழை

0

வங்காள விரிகுடாவில் தற்போது காணப்படும் காற்றழுத்த நிலைமைகள் காரணமாக மழை
தொடரும் என்றும், எதிர்வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர் புயலுக்குச் சாத்தியம்
காணப்படுகின்றது எனவும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும்
வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“கடந்த 8ஆம் திகதி சனிக்கிழமை எதிர்வுகூறியபடி வங்காள விரிகுடாவில் உருவாகிய
காற்றுச் சுழற்சி தற்போது இலங்கைக்குத் தென்கிழக்காக இலங்கைக்கு அருகில்
காணப்படுகிறது.

நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மழை

இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட
நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மழை எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை
வரை தொடரும் வாய்ப்புள்ளது.

மீளவும் ஒரு காற்றுச் சுழற்சி எதிர்வரும் 17ஆம் திகதி வங்காள விரிகுடாவில்
இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் உருவாகும். அது கிழக்கு மாகாணத்துக்கு அருகாக
நிலை கொள்ளும். இதனால், மீளவும் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை
வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது
முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதன்பின் எதிர்வரும் 21ஆம் திகதி இந்தோனேசியாவின் பண்டா ஆச்சே மாநிலத்துக்கு
அருகாக காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது. இது தீவிரம் பெற்று ஒரு
புயலாக மாறும் வாய்ப்புள்ளது.

பலத்த காற்று

இந்தப் புயலால் எதிர்வரும் 22ஆம் திகதி வரை இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு
மாகாணங்கள் மிக கன மழையைப் பெறும் என்பதோடு கடற்பகுதிகள் மற்றும் கரையோரப்
பகுதிகளில் பலத்த வேகத்தில் காற்று வீசக்கூடும்.

எனினும், இதனை எதிர்வரும்
18ஆம் திகதிக்குப் பின்னரே உறுதிப்படுத்த முடியும். இந்தப் புயலுக்குச்
சென்வார் எனப் பெயரிடப்படும்.

இதனால், எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 28ஆம்
திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக
மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.” – என்றுள்ளது.

NO COMMENTS

Exit mobile version