கொழும்பு துறைமுகத்தின் ஜெயா கொள்கலன் முனையம் மற்றும் கிழக்கு கொள்கலன்
முனையங்களில், நேற்று இரவு ஊழியர்கள் மேற்கொண்ட நான்கு மணி நேர
பணிப்புறக்கணிப்பால் குறைந்தது 300 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை துறைமுக அதிகாரசபையின் தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன.
விசாகப் பூரணைத் தின விடுமுறை நாட்களுடன் இணைந்த மே 12 மற்றும் 13 ஆகிய
திகதிகளில் பணிபுரிந்த அத்தியாவசிய ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை
குறைப்பதற்கு, துறைமுக அதிகாரசபை எடுத்த சர்ச்சைக்குரிய முடிவை அடுத்தே இந்த
பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
மீண்டும் பணிகளை ஆரம்பித்த தொழிலாளர்கள்
நேற்று இரவு 8 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு வரை இந்தப் பணிப்புறக்கணிப்பு
தொடர்ந்தது.
எனினும், முறைப்படி கூடுதல் நேர கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று நிர்வாகம்
தெரிவித்ததை அடுத்து, இன்று அதிகாலை 12:30 மணியளவில் தொழிலாளர்கள் மீண்டும்
பணிகளை ஆரம்பித்தனர்.
ஏப்ரல் 12ஆம் திகதி பூரணைத் தினத்தன்று செய்யப்படும் பணிகளுக்கான கூடுதல்
நேரக் கொடுப்பனவுகளை 10,000 ரூபாயாகவும், அடுத்த நாள் கொடுப்பனவை 5,000
ரூபாயாகவும் குறைப்பதென்று முன்னதாக துறைமுக நிர்வாகம் முடிவெடுத்திருந்தது.
