Home இலங்கை சமூகம் அரச பேருந்தில் மிதிபலகையில் தொங்கும் மாணவர்கள்! நுவரெலியாவில் அவல நிலை

அரச பேருந்தில் மிதிபலகையில் தொங்கும் மாணவர்கள்! நுவரெலியாவில் அவல நிலை

0

நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் காலை வேளையில் உரிய நேரத்துக்கு பேருந்துகள் சேவையில் ஈடுபடாமையினால் பாடசாலை மாணவர்கள் மிதிபலகையில் வெளியில் தொங்கியபடி
பயணம் செய்கின்றனர்.

இந்த வீதியில் இயங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் கடமையாற்றும் சாரதி அல்லது நடத்துனர் விடுமுறை எடுத்தால், சேவையில்
ஈடுபடும் பேருந்தும் திடீரென முற்றாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பேருந்தில்
ஏதேனும் பழுது ஏற்படும் சமயத்திலும் பேருந்துக்கள் நிறுத்தபடுவதாகவும் கூறப்படுகின்றது.

மக்கள் கோரிக்கை

இதனால் குறித்த பேருந்துகளில் தினமும் பயணிக்கும் நூற்றுக்கணக்கான
மாணவர்கள் மற்றும் அன்றாட தொழிலுக்குச் செல்வோர் சீரான பேருந்து போக்குவரத்து இல்லாமல்
சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.

குறிப்பாக கிலாரண்டன், டெஸ்போட், கிரிமிட்டி, வாழைமலை, அவோக்கா, கார்லிபேக்
போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்களே போக்குவரத்துச் சிக்கலால் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

@lankasrinews இ.போ.ச பஸ்கள் திடீரென நிறுத்தம் : பாடசாலை மாணவர்கள் அவதி! #nuwaraeliya #nuwaraeliya_srilanka #hatton #talawakelle #CTB #bus #tranding #trandingvideo ♬ original sound – LANKASRI TAMIL NEWS

அத்துடன், இ.போ.ச பேருந்துக்கான மாதாந்த பருவச்சீட்டு பெற்றுக்கொண்டவர்கள்
முச்சக்கரவண்டிகள் மற்றும் வேறு வாகனங்களில் செல்ல வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.  

மேலும், குறித்த பிரச்சினையால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக பெற்றோர்
கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே, இப்பிரதேச மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பாடசாலை
நேரங்களில் சீரான பேருந்து சேவையை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர
வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

NO COMMENTS

Exit mobile version