நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் மு. அகிலகுமாரனுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கை இரத்து செய்யுமாறு மு.அகிலகுமாரனால் எழுத்தாணை விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டு நேற்று (08.07.2024) மேன்முறையீட்டு நீதிமன்றின் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, நீதிபதி எம்.ரி. முகமது லஃபர் எழுத்தாணை விண்ணப்பத்தின் மீது திருப்தி அடைந்து, அனுமதி அளித்து, இடைக்காலத்தடை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
அதனடிப்படையில் ஜூலை 19 ஆம் திகதி வரை குறித்த நீதிமன்ற அவமதிப்புத் தொடர்பாக M. A சுமந்திரனால் தொடுக்கப்பட்ட வழக்கின் மீதான நடவடிக்கைகள்
நிறுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த வழக்கை ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் .சி.பெரேரா ஆதரித்துள்ளதுடன் கே.ரவீந்திரன் மற்றும் டி.டபிள்யூ.ஜோந்தாசன் மற்றும் நிபுனி எஸ். கஜசிங்க ஆகியோர் மனுதாரர் முத்துக்குமாரசுவாமி அகிலகுமாரன் சார்பில் மன்றில் தோன்றியுள்ளனர்.
தமிழரசுக்கட்சியின் தலைவர் மற்றும் ஏனைய பதவிகள் தொடர்பில் திருகோணமலையில் தொடரப்பட்ட வழக்குத் தொடர்பாக ஏனைய பத்திரிகைகள் போலவும் சுதந்திரன் பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், குறித்த பத்திரிகைக்கு எதிராக மட்டும் இவ்வாறானதொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத்தொடுக்கப்பட்டமை அரசியல் வட்டாரங்களிலும் பலதரப்பட்ட விவாதங்களை உருவாக்கியிருந்தது.
அந்தவகையில் இந்த இடைக்காலத்தடையுத்தரவு அரசியல் வட்டாரத்தில் விசேட கவனத்தை ஈர்த்துள்ளது.
Source: https://tamilwin.com/article/sumandran-s-case-against-akhilan-1720565397
