Courtesy: Sivaa Mayuri
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை(Gotabaya Rajapaksa) ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு வெளிநாட்டு இலங்கையர்கள் முக்கியப் பங்காற்றியதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பிரதான தெரிவாக தேசிய மக்கள் சக்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய மாற்றம்
சுவீடனின் (Sweden)ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தற்போது அமைப்பு மாற்றம் மற்றும் இலங்கைக்கான புதிய மாற்றத்திற்காக பிரசாரம் செய்து வருவதாகவும், அந்த மாற்றத்தை செய்வதற்கு தேசிய மக்கள் சக்தியே அவர்களின் விருப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சுவீடனில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு வந்து தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது தேசிய மக்கள் சக்தி ஆதரவைப் பெற இணைய பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கையில் உள்ள உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் அவர்களுக்கு இதனை கூறுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் அபிலாசைகள்
எதிர்வரும் தேர்தல்களில் வெளிநாட்டு இலங்கையர்கள் முக்கிய சக்தியாக இருப்பதாகத் தெரிவித்த திஸாநாயக்க, அதிகாரத்தைப் பெறுவதற்கும், அதிகாரத்தைப் பெற்ற பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
கோட்டாபயவை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் வெளிநாட்டு இலங்கையர்கள் முக்கியப் பங்காற்றினர்.
அதேபோன்று அவர் மக்களின் அபிலாசைகளை தகர்த்தெறிந்த பின்னர், கோட்டாபய வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற பொதுக்கருத்தையும் அவர்கள் உருவாக்கினர்.
இந்தநிலையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் அண்மைக்காலமாக தமது கட்சியே போன்று வேறு எந்த கட்சியாலும் அணுகமுடியவில்லை என்றும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
Source: https://tamilwin.com/article/support-me-like-gota-anura-in-sweden-1714308445
