சிறி ஜெயவர்தனபுர மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர், ரூ. 50,000 மதிப்புள்ள அறுவை சிகிச்சை உபகரணங்களை ரூ. 175,000 க்கு நோயாளிகளுக்கு விற்றதாகக் கூறப்படும் நிலையில், மூளைச்சாவு அடைந்த நோயாளிகளுக்கு கூடஅறுவை சிகிச்சைசெய்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சிறிஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் ஆலோசகர் மற்றும் நரம்பியல் அறுவை
சிகிச்சை நிபுணர் மகேசி சூரசிங்க விஜேரத்ன மீதான ஊழல் வழக்கின் போது, லஞ்சம்
அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம் இந்தக் குற்றச்சாட்டை
சுமத்தியுள்ளது.
மூளைச்சாவு அடைந்த நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை
ஆணைக்குழுவின் சமர்ப்பிப்புகளின்படி, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்
ஏற்கனவே மருத்துவ ரீதியாக மூளைச்சாவு அடைந்தவர்கள் என வகைப்படுத்தப்பட்ட
நோயாளிகளுக்கு வெளிப்புற வென்ட்ரிகுலர் வடிகால் மற்றும்
வென்ட்ரிகுலோபெரிட்டோனியல் செருகுவது போன்ற அறுவை சிகிச்சை முறைகளைச்
செய்துள்ளார்.
சில சந்தர்ப்பங்களில், மூளைச்சாவடைந்த நோயாளிகளின் இதய துடிப்பு மட்டும்
ஐந்து நாட்கள் வரை செயற்கையாக நிலைநிறுத்தப்பட்டதாகவும் ஆணையகம் குற்றம்
சுமத்தியுள்ளது.
ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நோயாளியின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாக
குற்றம் சாட்டப்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவமனை தலைமை
எழுதுவினைஞர் மற்றும் மருத்துவ உபகரண விநியோகஸ்தர் ஆகியோர் மீதான வழக்கின்
விசாரணையின் போது கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க
முன்னிலையில், இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த அறுவை சிகிச்சைகளுக்கு எந்த சிகிச்சை மதிப்பும் இல்லை என்றும், குறித்த
மருத்துவர் தமது கணவருடன்தொடர்புடைய ஒரு தனியார் நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட
அறுவை சிகிச்சை உபகரணங்களை விற்பனை செய்வதன் மூலம் நிதி ஆதாயத்தை
ஈட்டுவதற்காகவே இந்த செயற்பாடுகளை மேற்கொண்டதாக ஆணையகம் கூறியுள்ளது.
பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக அறுவை சிகிச்சை
இந்த மருத்துவர் உயிருள்ள நோயாளிகளுக்கு மாத்திரம் அல்ல ஏற்கனவே மூளைச்சாவு
அடைந்தவர்களுக்கு கூட, சில சந்தர்ப்பங்களில் ஐந்து நாட்கள் வரை, நியாயமற்ற
முறையில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார்
என்று ஆணையகத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் முன்னதாக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்
ஆணையகத்தால் கைது செய்யப்பட்டு கடந்த ஜூன் 17 அன்று நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சுமார் 92 முறைப்பாடுகள்
அத்தியாவசிய நரம்பியல் அறுவை சிகிச்சை
மருந்துகளுக்காக மருத்துவமனை நோயாளிகளை வெளிப்புற விநியோகஸ்தர்களிடம்
அனுப்பியதாகவும், மருத்துவமனை கொள்முதல் நடைமுறைகளைத் தவிர்த்து, அதற்கு நிதி
இழப்பை ஏற்படுத்தியதாகவும், அதே நேரத்தில் தங்களுக்கும் மூன்றாம்
தரப்பினருக்கும் தேவையற்ற நன்மைகளைப் பெற்றதாகவும் அவர்கள் மீது குற்றம்
சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை பாதிக்கப்பட்ட நோயாளிகளால் தொலைபேசி மூலம் செய்யப்பட்ட
குற்றச்சாட்டுகள் உட்பட, இந்த மருத்துவர் தொடர்பாக இன்றுவரை சுமார் 92
முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் நீதிமன்றத்தில்
தெரிவித்துள்ளது.
இதன்போது பிரதிவாதிகளின் சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்தநிலையில் அனைத்து சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த பிறகு, தலைமை நீதிவான்
பிணை மனுக்களை நிராகரித்து, மூன்று சந்தேக நபர்களையும் ஜூலை 8 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
