Home அமெரிக்கா வெள்ளைமாளிகையருகே துப்பாக்கி சூடு! அமெரிக்காவில் பெரும் பரபரப்பு- தொடர்ந்து இலக்கு வைக்கப்படும் ட்ரம்ப்

வெள்ளைமாளிகையருகே துப்பாக்கி சூடு! அமெரிக்காவில் பெரும் பரபரப்பு- தொடர்ந்து இலக்கு வைக்கப்படும் ட்ரம்ப்

0

அமெரிக்காவின் தலைநகர் Washington, D.C.யில் உள்ள வெள்ளைமைாளிகையருகே இன்று(24) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரகசிய சேவை முகவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் 21 வயது இளைஞர் ஒருவர் பாதுகாப்பு படையினரின் பதிலடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

வெள்ளைமாளிகையருகே துப்பாக்கிச் சூடு

மேலும், அருகில் இருந்த வழிப்போக்கர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் (GMT 23:00), 17ஆவது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ சந்திப்புக்கு அருகில் சந்தேக நபர் தனது பையிலிருந்து ஆயுதத்தை எடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியதாக அமெரிக்க இரகசிய சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த இரகசிய சேவை அதிகாரிகள் பதிலடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த பதிலடி தாக்குதலில் சந்தேக நபர் குண்டுக்காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பின்னர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் அருகில் நின்றிருந்த ஒருவரும் காயமடைந்துள்ளார்.

எனினும், எந்த இரகசிய சேவை அதிகாரிகளுக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற வேளையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்ததாக இரகசிய சேவை அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டின் நோக்கம்

ஆனால் ஜனாதிபதியின் பாதுகாப்பு அல்லது வெள்ளை மாளிகை செயல்பாடுகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், CBS வெளியிட்ட தகவலின்படி, உயிரிழந்த சந்தேக நபர் 21 வயதான நசீர் பெஸ்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே அமெரிக்க இரகசிய சேவைக்கு அறிமுகமானவர் என்றும், 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டு பின்னர் மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டின் நோக்கம் என்ன என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. மேலும் அவர் பயன்படுத்திய ஆயுதத்தின் வகை பற்றியும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

காயமடைந்த வழிப்போக்கர் சந்தேக நபரின் துப்பாக்கிச் சூட்டாலா அல்லது பாதுகாப்பு படையினரின் பதிலடி சூட்டாலா காயமடைந்தார் என்பது குறித்தும் தெளிவான தகவல் இல்லை.

சம்பவத்திற்குப் பின்னர் வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பல தெருக்கள் உடனடியாக மூடப்பட்டதுடன், ஏராளமான பொலிஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

FBI அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவ நேரத்தில் வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பல பத்திரிகையாளர்கள் தொடர்ச்சியாக 15 முதல் 30 வரை துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக வெள்ளை மாளிகைக்குள் உள்ள பத்திரிகையாளர் சந்திப்பு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 கடும் பாதுகாப்பு நடைமுறையில்

ABC News நிருபர் செலினா வாங் சமூக ஊடகங்களில் பகிர்ந்த காணொளியில், துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் “உடனே செய்தியாளர் சந்திப்பு அறைக்கு ஓடுங்கள்” என பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்ததாக கூறியுள்ளார்.

இதனையடுத்து, வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் கடும் பாதுகாப்பு நடைமுறையில் இருந்தது.

ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸ் வாகனங்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் அப்பகுதியில் குவிந்திருந்ததாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளை மாளிகையில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு, உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு (ஜிஎம்டி 00:00) பின்னர் நீக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் வெள்ளை மாளிகையில் தங்கியிருந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் இருந்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை.

வெள்ளை மாளிகை செய்தியாளர் இரவு விருந்தில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு மாதத்திற்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அமெரிக்க இரகசிய சேவை அமைப்பும் FBIயும் இணைந்து தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.

Source: https://tamilwin.com/article/suspect-killed-during-shooting-near-white-house-1779649361

NO COMMENTS

Exit mobile version