நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்கள் தமிழரசு கட்சியை நிராகரிக்க வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வொன்றில் நேற்று(08.04.2025) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“நாடாளுமன்றத்தில் 19 தமிழ் உறுப்பினர்கள் உள்ள போதும் 10 உறுப்பினர்களைக்கொண்ட அறுதிப்பெரும்பாண்மை ஒருவருக்கும் இல்லை. தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளை முன்னெடுத்த போதும் அது சாத்தியப்படவில்லை.
தமிழ்த்தேசிய நீக்க அரசியல்
சீ.வி.கே. சிவஞானத்துடன் பேசிய போது அதற்கு குழு அமைப்பதாக சொல்லியிருந்தார். அதன் பின்பு சுமந்திரன் பொதுச்செயலாளராக வந்த பின்பு அந்த விடயம் தேவையில்லை என்று சொல்லப்பட்டுள்ளது.
தற்போது தமிழரசுக்கட்சி ஆட்சி செய்பவர்கள் தமிழ்த்தேசிய நீக்க அரசியலை கொண்டு செல்பவர்கள். சுதந்திரதினம் கொண்டாட எத்தனிப்பவர்களும் சிங்கள கட்சிகளுக்கு இங்கு வைத்து ஆதரவு வழங்குபவர்களும் தான் உள்ளனர்.
இந்தியப் பிரதமரை சந்திக்கும் போது நாங்கள் சமஸ்டியை வலியுறுத்தினோம். மற்றவர்கள் ஒற்றையாட்சி 13ஐ தான் வலியுறுத்தினார்கள். மக்களிடம் வாக்கு கேட்க வரும் போது சமஸ்டியை சொல்கிறார்கள்.
மக்கள் வழங்கும் ஆணையை தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். இந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கில் தோற்கடிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
