அரசுக்கு எதிராக நுகேகொடையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக்
கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியை “அலிபாபாவும் 400 திருடர்களும்” என்று
தேசிய மக்கள் சக்தி தரப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.
நாமல் ராஜபக்ச
எம்.பியைத் திருடர்களின் இளவரசர் என்றும் அநுர தரப்பு விளாசித் தள்ளியுள்ளது.
திருடர்களின் இளவரசர் நாமல்
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்
பிரதீப் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இந்த நாடு வங்குரோத்து நிலை அடைந்ததற்கு மகிந்த ராஜபக்சவின் குடும்பமே பதில்
சொல்ல வேண்டும் என்று வலியுறுத்திய அவர், நுகேகொடையில் மேடையில் இருந்தவர்கள்
அனைவரும் ஏற்கனவே சிறை சென்று வந்துள்ளவர்கள் என்றும், இன்று எல்லாத்
திருடர்களும் ஒரே மேடையில் தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராக
அணிதிரண்டுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், ஹரின் பெர்னாண்டோ ஒரு காலத்தில் மகிந்தவை ‘பகல் திருடன்’ என்று
வர்ணித்த அதே வாயால், இன்று நாமல் ராஜபக்சவை ‘இளவரசர்’ என்று சொல்வதைச்
சாடியுள்ள பிரதி அமைச்சர், நாமல் ராஜபக்சவை ‘திருட்டு இளவரசர்’ என்று மட்டுமே
ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
“மொட்டுக் கட்சி என்பது “இனவாதத்தின் சின்னம்” என்றும், இந்தத் திருட்டுக்
கும்பல் மீண்டும் இனவாதத்தை உருவாக்கி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி
ஆட்சியைக் கைப்பற்றப் பகல் கனவு காண்கின்றது.
ஆனால், இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களும் புத்திஜீவிகளாகச்
சிந்திக்கின்ற காரணத்தால், அந்தக் கட்சியால் இந்த முயற்சியில் ஒருபோதும்
வெற்றி பெற முடியாது.” என்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
