முல்லைத்தீவு – செஞ்சோலை வளாகத்தில் இலங்கை இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த
மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை
வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை
நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள்
4 பேரினதும் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வான் தாக்குதல் இடம்பெற்ற
இடத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மலர்தூவி அஞ்சலி
இந்த விமானத்தாக்குதல் கடந்த 2006.08.14 ஆம் திகதியன்று வள்ளிபுனம் – இடைக்கட்டு பகுதியில் உள்ள
செஞ்சோலை வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிலையில், உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி
செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்,
முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் குகன் , இளைஞர்கள்,
பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலியினை
செலுத்தியிருந்தனர்.
மேலும், செஞ்சோலை படுகொலையின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணத்தில்
இடம்பெற்றது.
இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் முனியப்பர் கோவில் முன்றலில் தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது உயிரிழந்தவர்களின் நினைவாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும்
செலுத்தப்பட்டது.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியின் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன், கட்சி உறுப்பினர் மற்றும்
பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி – கஜி
Source: https://tamilwin.com/article/tribute-to-relatives-who-died-in-sencholai-1723608291
