Home இலங்கை குற்றம் யாழில் பசு மாட்டைத் திருடி இறைச்சியாக்கிய சந்தேகநபர்கள் கைது

யாழில் பசு மாட்டைத் திருடி இறைச்சியாக்கிய சந்தேகநபர்கள் கைது

0

யாழில், பசு மாட்டைத் திருடி அதை இறைச்சிக்காக வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்த மாட்டை  திருடி இறைச்சிக்காக வெட்டிய பொதுநூலக ஊழியர் ஒருவர் மேலும் ஒருவர் இளைஞர்களால் பிடிக்கப்பட்டு  சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட  சந்தேகநபர்களை இன்றையதினம்(30) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

கடந்த புதன்கிழமை நுணாவில் பொதுநூலகத்திற்கு அருகில் உள்ள காணியில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்ட பசுமாடு
காணமல் போயுள்ளது.

சந்தேகமடைந்த இளைஞர்கள்

இந்நிலையில் பசுவின் உரிமையாளரும் அப்பகுதி இளைஞர்களும் தேடுதல் நடத்தி வந்த நிலையில்,  நேற்று (29)  பிற்பகல் நூலக மதிலுக்கு அருகில் பசுமாட்டின் தலை உட்பட்ட பாகங்களைக்
கண்டுள்ளனர்.

இதையடுத்து நூலகத்திற்குள் சென்று பார்த்த பொழுது நூலக குளியலறைக்குள் வைத்து பசுவினை இறைச்சியாக்கிய இரத்தக்கறைகளையும், பசு மாட்டின் உடல் பாகங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகமடைந்த இளைஞர்கள் ஊழியரை விசாரித்த பொழுது
இன்னொருவருடன் இணைந்து புதன்கிழமை கடமை நேரத்தில் மதியம் 1.00 மணியளவில்
பசுவினை இறைச்சியாக்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

பொலிஸாரிடம் முறைப்பாடு 

இதன்பிறகு,  மற்றைய நபரையும் பிடித்த இளைஞர்கள், அவர்கள் இருவரையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விடயம் வெளியில் தெரிந்தால் நகரசபையின் பெயருக்கு அவதூறு ஏற்படும் என தெரிவித்து அதிகாரிகள் சிலர் குறித்த இளைஞர்களோடு சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

எனினும் இளைஞர்கள் அதற்கு சம்மதிக்காமல் இப்படியான
ஊழியர்கள் பணியில் இருந்து நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Source: https://tamilwin.com/article/two-arrested-for-slaughtering-cow-in-library-1732948600

NO COMMENTS

Exit mobile version