காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வாகனத்துக்கு வழங்கப்படும் எரிபொருள்
(பவுச்சர் ) பற்றுச்சீட்டை எரிபொருள் நிலையத்தில் வழங்கி 6600 ரூபா
அரச பணத்தை மோசடி செய்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வாகன சாரதியான பொலிஸ்
கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை நேற்று (16) இரவு பொலிஸ் நிலையத்தில்
வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொலிஸ் நிலையத்தின் வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக
பொலிஸ் நிலையத்தில் பவுச்சரை பெற்றுக் கொண்டு அதனை நகரில் உள்ள எரிபொருள்
நிரப்பு நிலையம் ஒன்றில் வழங்கி அதற்கான எரிபொருனை வாகனங்களுக்கு நிரப்பி
செல்வது வழமையானது.
மோசடி
இந்த நிலையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பொலிஸ் ஜீப்வண்டிக்கும்,
பொலிஸ் நிலையத்திலுள்ள மின்சார உற்பத்தி செய்யும் இயந்திரமான ஜெனரேற்றருக்கும்
டீசலுக்கான (பவுச்சர்) அனுமதி சீட்டை குறித்த சாரதி பெற்றுக் கொண்டு எரிபொருள்
நிரப்பு நிலையத்துக்கு சென்று அங்கு 12400 ரூபாவுக்கு
ஜீப்வண்டிக்கான டீசலை நிரப்பிக் கொண்டு ஜெனரேற்றருக்கான 6600 ரூபா
பெறுமதியான டீசலை பெற்றுக் கொள்ளாமல் அதற்கான பணத்தை எரிபொருள் நிலையத்தில்
வாங்கி எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.
இந்த மோசடி தொடர்பாக புலனாய்வு பிரிவினர் பொலிஸ் உயர் அதிகாரியின் கவனத்துக்கு
கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து இது தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு
பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வந்த நிலையில் அரச பணத்தை மோசடி செய்துள்ளமை
கண்டுபிடிக்கப்பட்டது.
விளக்கமறியல் உத்தரவு
தொடர்ந்து சம்பவதினமான நேற்று இந்த அரச பண மோசடி தொடர்பாக பொலிஸ் சாரதியாக
கடமையாற்றிவரும் 38 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்
முன்னிலையில் இன்று (17) முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை
எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர்
மேற்கொண்டு வருகின்றனர்.
