Home இலங்கை சமூகம் மட்டக்களப்பில் 4ஆவது நாளாக தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

மட்டக்களப்பில் 4ஆவது நாளாக தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

0

ஏனைய மாவட்டங்களில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும்
நிலையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் நியமனங்கள் வழங்கப்படாத நிலை
காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட அரசாங்கம் கவனம்
செலுத்தவேண்டும் என பட்டதாரிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நான்காவது நாளாகவும் இன்றைய தினம்
மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்
நினைவுத்தூபிக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

உரிமையினை வலியுறுத்தும் கோசங்கள்

பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு போராட்டம்
முன்னெடுக்கப்பட்டதுடன் சிலர் தமது கைக்குழந்தைகளுடன் இந்த போராட்டத்தில்
கலந்துகொண்டனர்.

இதன்போது தமது தொழில் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு கோசங்கள்
எழுப்பப்ட்டன.

பெற்ற பட்டம் எமது வாழ்விற்கு ஏணியாகுமோ அல்லது நாளை காகித
ஓடமாகுமோ,பட்டத்தினை பரணில் வைக்க பயனில்லா உயர் கல்வி எதற்கு,யாருக்கும்
பயனற்ற பல்கலைக்கழக பட்டம் எதற்கு,கல்வி கொடுத்த அரசே கொள்ளிவைக்கலாமா போன்ற
வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
ஏந்தியிருந்தனர்.

மேலும், எங்களது தொழில் உரிமைகளை உறுதிப்படுத்தும் வரையில் தமது போராட்டம் தொடரும் என
இங்கு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version