Home இலங்கை சமூகம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பு

0

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள
உயர்வு சமரில் வெற்றிபெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கிய ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன்
தெரிவித்துள்ளார்.

சம்பள விடயம் தொடர்பில் இன்று (10.09.2024) அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“அடிப்படை நாள் சம்பளம் 35 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டு ஆயிரத்து 350 ரூபா
கிடைக்கப்பெறும் நிலையில், எஞ்சிய 350 ரூபா கொடுப்பனவையும் கூடிய விரைவில்
பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் எமது தொழிலாளர்களுக்கு 70
சதவீத சம்பள உயர்வு கிடைக்கப்பெறும்.

வாக்குறுதி 

நல்லாட்சி காலத்தில் எமது தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவை கூட
பெற்றுக்கொடுக்க முடியாமல் இருந்த அரசியல் தலைவர்கள், இன்று போலி
வாக்குறுதிகளை அள்ளி வழங்குகின்றனர்.

தேர்தலில் தோல்வி உறுதி என்பதால்தான்
பொய் வாக்குறுதிகளை வழங்கியாவது வெற்றி பெறலாம் என முயற்சிக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என்ற
உறுதிமொழியையும் நாம் நிறைவேற்றினோம். தற்போது அடிப்படை நாள் சம்பளமாக
ஆயிரத்து 350 ரூபாவையும் பெற்றுக்கொடுத்துள்ளோம்.

மேலதிக கொடுப்பனவான 350
ரூபாவையும் விரைவில் பெற்றுக்கொடுத்து நாளொன்றுக்கு 1,700 ரூபா கிடைப்பதற்கு
வழிவகுக்கப்படும். எமது மக்களுக்கு காணி உரிமை வேண்டுமென எமது அமைச்சர் ஜீவன் தொண்டமான்
ஜனாதிபதியிடம் கேட்டார், அதனை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பங்குதாரர்கள்  

தோட்டங்களை கிராமங்களாக்கி தொழிலாளர்களுக்கு உள்ள தடைகளை நீக்குவதற்கும்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம்கூட
முன்வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்ற பிறகு எமது அமைச்சர்
தலைமையில் எமது தொழிலாளர்களை சிறுதோட்ட பங்குதாரர்களாக மாற்றும் திட்டமும்
உள்ளது. அது உரிய வகையில் செயற்படுத்தப்படும்.

ஏனையோர் போல் பொய்யான
வாக்குறுதிகள் வழங்கப்பட மாட்டாது.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலானது நாட்டில் எதிர்காலத்தை மட்டுமல்ல மலையக
எதிர்காலத்தையும் நிர்ணயிக்கப்போகும் தேர்தலாகும். எனவே, ஜனாதிபதிக்கு
வாக்களித்து நாட்டையும் முன்னேற்றி, நாமும் முன்னேறுவோம்” என தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version