இலங்கையின் சுற்றுலாத் துறையை குறிவைத்து, பல்வேறு போலி செய்திகள்
பரப்பப்படுவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதன் மூலம் அரசாங்க செயல்பாடுகளை, நாசப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக
சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டவர் தாக்கப்பட்ட காணொளி
ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள அவர், வெலிகம மற்றும் அருகம்பே பகுதிகள்
சம்பந்தப்பட்ட இரண்டு குறிப்பிட்ட சம்பவங்கள் மூலம், இது தெளிவாகிறது என்று
கூறியுள்ளார்.
முதல் சம்பவமாக, வெலிகமவில் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர் தாக்கப்பட்ட
காணொளியாகும்
இது, 2024 இல் நடந்த ஒரு சம்பவம் என்று விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டாவது சம்பவமாக, அருகம்பை பகுதியில் பொது இடங்களில் சுற்றுலாப் பயணிகள்
நீச்சல் உடைகள் அணிவதைத் தவிர்க்குமாறு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது, அந்தப் பகுதியில் இன பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவும்
கண்டறியப்பட்டுள்ளது என்று பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு சம்பவம்
கொழும்பு மாநகராட்சி மன்றம் உட்பட முக்கிய உள்ளூராட்சி மன்றங்களில்
கட்டுப்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து பணியாற்றி
வரும் நேரத்தில் அருகம்பை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதை, பிரதி
அமைச்சர் ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அருகம்பேயில் உள்ள முஸ்லிம் சமூகத்தினரிடம் விசாரித்த போது,
பொது இடத்தில், ஓருவர் நிர்வாணமாக நடந்து சென்ற ஒரு சம்பவத்தை அவர்கள்
தெரிவித்துள்ளனர்.
அதனை தாம் எதிர்ப்பதாகவும், அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இது, சிலர் அல்லது குழுவினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு
சம்பவமாக இருக்கலாம் என்று அரசாங்கம் சந்தேகிப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இனப் பதற்றங்களை ஏற்படுத்தவும், தேசத்தை மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகளை
நாசப்படுத்தவும் சிலர் மேற்கொண்ட முயற்சிகளாக இந்த சம்பவங்களை அரசாங்கம்
கருதுவதாக, பிரதி அமைச்சர் ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
