முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட எழுதிய “The Turning Point: The
Naval Role in Sri Lanka’s War on LTTE Terrorism” என்ற சுயசரிதை புத்தகம்,
பிரித்தானியாவில் Amazon விற்பனை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் (International
Truth and Justice Project – ITJP) எனும் அமைப்பின் கோரிக்கைக்கு அமைய
எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
புத்தக விற்பனை பிரித்தானிய தடைச்சட்டங்களை மீறும்
கரன்னாகொடவின் புத்தக விற்பனை பிரித்தானிய தடைச்சட்டங்களை மீறும் எனவும்,
தடைக்குட்பட்ட ஒருவருக்கு காப்புரிமை உள்ளிட்ட வளங்களை வழங்குவது குற்றமாக
கருதப்படும் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் Amazon-க்கு
அறிவித்திருந்தது.
பிரித்தானிய சட்டத்தின்படி, இத்தகைய மீறலுக்காக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
விதிக்கப்படலாம்.
Amazon பிரிட்டன் கிளை, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின்
கோரிக்கைக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
கரன்னாகொட மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு
2005 முதல் 2009 வரை உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில் கடற்படைத் தளபதியாக
பணியாற்றிய கரன்னாகொட மீது, நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் மனித உரிமை
மீறல்கள் செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, கடந்த மார்ச் மாதம், பிரித்தானிய அரசு வசந்த கரன்னாகொட உட்பட
ஐவருக்கு எதிராக தடை விதித்திருந்தது.
