யாழ்ப்பாணம் – சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகாமையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் இருவர்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் சடலம் உருக்குலைந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினரால் மீட்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான சுரேஷ்குமார் குலதீபா (வயது 36) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
மேலதிக விசாரணை
சடலத்தின் மீதான உடற்கூற்று பரிசோதனைகளில் அவர் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்ற விடயம் தெரியவந்தது.
அந்த பெண்ணின் தலையில் குத்தப்பட்டு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரியக்கூடிய திரவம் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்டுள்ளார்.
அவரது நுரையீரலில் நீர் புகுந்து, மூச்சுத்திணறலால் உயிரிழந்தது உடற்கூராய்வில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையிலேயே தற்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் பெண் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
