வடக்கில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி, நீர் வசதிகளை வழங்குதல், வடக்கு மக்களின் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாத்து அவர்களின் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் உலக வங்கி பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) உலக வங்கி பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இடையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர், அரசாங்கத்தின் முன்னணி திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கிராமப்புற வறுமை ஒழிப்பு
இளைஞர் வேலைவாய்ப்பு திட்டம், தூய்மை இலங்கை, கிராமப்புற வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கவும், கல்வி, எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வடக்கு மேம்பாடு ஆகியவற்றில் புதிய திட்டங்களுக்கு ஆதரவளிக்கவும் இதன்போது வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.
கல்வித் துறையை மேம்படுத்துவதன் மூலம் கிராமப்புற வறுமையை ஒழிக்க முடியும் என்று கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட கல்வி சீர்திருத்தப் பணிகளுக்கும் பொதுப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்கும் தேவையான ஆதரவை வழங்குமாறு உலக வங்கியின் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் விவசாயத் துறை 28% பணியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், இலங்கை பொருளாதாரத்திற்கு விவசாயத் துறையின் பங்களிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% மட்டுமே. இலங்கையின் மக்கள் தொகை அடர்த்திக்கு ஏற்ப மக்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக வங்கி பிரதிநிதிகள்
மேலும், உலக வங்கி பிரதிநிதிகளுக்கு இந்த திட்டம் குறித்து ஜனாதிபதி விளக்கினார்.
இளைஞர் சமூகத்திற்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அரசாங்கத்தின் திட்டம் குறித்தும், 2025 ஆம் ஆண்டில் நாட்டிற்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அத்தோடு, விமான நிலையம் மற்றும் துறைமுகத்தின் மேம்பாட்டுக்காக புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், துறைமுகத்தின் வளர்ச்சி விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும், வடக்கின் வளர்ச்சிக்கு அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது என்றும், வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்கள் உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வடக்கில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி, நீர் வசதிகளை வழங்குதல், வடக்கு மக்களின் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாத்து அவர்களின் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது ஆகியவையும் செய்யப்படும் என்று ஜனாதிபதி மேலும் கூறியுளாளர்.
Source: https://tamilwin.com/article/world-bank-supports-north-anura-government-1737462285
