உலக சமாதானம் மற்றும் நிலைத்தன்மைக்கு தொடர்பாடல்களுக்கான ஊடகங்கள் தொடர்ந்தும் திறந்த நிலையில் இருக்க வேண்டியது அத்தியாவசியமானது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அபிவிருத்திக்கான உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் ஆற்றல் எனும் தலைப்பில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உலகப் பொருளாதார மன்றத்தின் முதல் சிறப்புக் கூட்டம் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நகரில் நேற்றும் இன்றும் நடைபெற்றது.
உலகப் பொருளாதார மன்ற கூட்டம்
சவூதி அரேபியாவின் இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் உலகின் பல நாடுகளது தலைவர்களும், அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.
இதற்கமை, இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பங்கேற்றுள்ளார்.
இதன் போது உரையாற்றிய அலி சப்ரி, உலகின் வடக்கு மற்றும் தென் பகுதிகளில் உள்ள நாடுகளுக்கிடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கையில், வார்த்தைகளால் கூறப்படும் விடயங்கள் செயலில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
உலக சமாதானம்
உலக சமாதானம் மற்றும் நிலைத்தன்மை ஆகியன வளர்ச்சிக்கு வழிவகுப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிக அதிகாரமுள்ள உலகின் வட பகுதியில் உள்ள நாடுகள், ஜனநாயகத்துக்கான இராஜதந்திரி வலையமைப்புகளை மூடக்கூடாதென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தொடர்பாடல்களுக்கான ஊடகங்கள் திறக்கப்பட வேண்டுமெனவும் உலகின் தென் பகுதிகளில் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தான் உள்ளிட்ட ஏனைய தலைவர்கள் வட பகுதிகளில் உள்ள நாடுகளிடம் கோருவதாக அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.
Source: https://ibctamil.com/article/world-peace-stability-communication-important-ali-1714400620
