மட்டக்களப்பு (Batticaloa) – ஏறாவூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பிரதேசமொன்றில் 14 வயது சிறுமி ஒருவர் 22 வயது இளைஞன் ஒருவரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞனையும் அவரது தாயாரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, இன்று புதன்கிழமை (10) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “ தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் தந்தை இல்லை எனவும் தாயார் வேலை வாய்ப்புக்காக மத்தியகிழக்கு நாடு ஒன்றுக்கு சென்றுள்ள நிலையில் சிறுமி உறவினருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
கைது நடவடிக்கை
இந்த சிறுமி பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த நிலையில், அந்த பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனுடன் காதல் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, கடந்த மே மாதம் சிறுமியை இளைஞன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு தங்கவைத்து தவறான முறைக்குட்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், இது தொடர்பாக பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
இதனையடுத்து சம்பவதினமான இன்று சிறுமியை அடைத்து வைத்து தவறான முறைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டிலும் இளைஞனின் தாயை அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்ததுடன் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Source: https://ibctamil.com/article/young-man-fell-in-love-with-a-girl-and-abused-her-1720603896
