கொழும்பின் (Colombo) புறநகர் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் பெண்களை பணத்திற்கு விற்பனை செய்வதாக கூறப்படும் இடத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
தலவத்துகொட பன்னிபிட்டிய வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தலங்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்
மகியங்கனை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் கிராமத்திற்கு சென்று, நேற்று (16) மாலை தனது பணியிடத்திற்கு வந்த சில நிமிடங்களில், அவர் தரையில் விழுந்துள்ளார்.
அங்கிருந்தவர்கள் அவரை தலங்கம பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை விசாரணை
குறித்த பெண் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை உறுதி படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், பிரேத பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Source: https://ibctamil.com/article/young-women-died-in-spa-center-in-colombo-1718636046
