Home இலங்கை யாழ். மறைமாவட்டத்துக்கு புதிய ஆயர் இன்று நியமனம்!

யாழ். மறைமாவட்டத்துக்கு புதிய ஆயர் இன்று நியமனம்!

0
image

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம், திருத்தந்தை லியோவால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஓய்வுபெற்றமையைத் தொடர்ந்தே, இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

1966ஆம் ஆண்டு பிறந்த பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள், யாழ். தீவகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவராவார். இவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், முதுகலைமாணி, கலைமாணி பட்டங்களையும் பெற்றுள்ளார். 

அத்துடன், உரோமில் இறையியலில் பட்டத்தையும், கொழும்பில் கல்வியியல் டிப்ளோமாவையும், ஐக்கிய இராச்சியத்தில் கல்வியியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுக்கொண்ட பன்முகக் கல்வியாளராவார்.

சமயப் பணிகளும் பதவிகளும்

* 2000: கொழும்பு மறைமாவட்டக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டு, பல்வேறு பங்குகளில் ஆன்மீக, கல்வி மற்றும் நிர்வாகப் பணிகளை ஆற்றினார்.

* 2020 ஜூலை 13: திருத்தந்தை பிரான்சிஸால் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார்.

* 2020 ஆகஸ்ட் 29: ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

* 2024 ஆகஸ்ட் 19: மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராக நியமிக்கப்பட்டு தற்போதும் பணியாற்றி வருகின்றார்.

யாழ். மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தனது பதவியிலிருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையிலேயே, கொழும்பு உயர் மறைமாவட்டத் துணை ஆயராகவும் மட்டக்களப்பு அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் கடமையாற்றி வந்த பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Source: https://samugammedia.com/new-bishop-appointed-for-the-jaffna-diocese-today-1782741260

NO COMMENTS

Exit mobile version