கண்டி மாவட்டத்தின் அலவத்துகொட, படுகொட பகுதியில் இடம்பெற்ற துயரச் சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடு கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென மண்மேடு சரிந்து விழுந்ததில் 49 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, வீடு நிர்மாணிப்பதற்காக வெட்டப்பட்ட நிலப்பகுதியில் அடித்தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அப்போது குழிக்குள் வேலை செய்து கொண்டிருந்த நபர் மீது எதிர்பாராத விதமாக மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
சம்பவத்துக்குப் பின்னர் அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அகுரணை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
எனினும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது சடலம் தற்போது கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
