Home இலங்கை அடுத்தடுத்து வெடிக்கும் பதற்றம்! மட்டக்களப்பு, யாழ், பதுளை சிறைகளில் பாதுகாப்பு தீவிரம்

அடுத்தடுத்து வெடிக்கும் பதற்றம்! மட்டக்களப்பு, யாழ், பதுளை சிறைகளில் பாதுகாப்பு தீவிரம்

0
image

இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள வன்முறை மற்றும் அமைதியின்மை சம்பவங்களையடுத்து, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டின் பல சிறைச்சாலைகளிலும் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் பாதுகாப்பு தொடர்பிலும் பாதுகாப்புத் தரப்பினர் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் சிறைச்சாலையைச் சூழவும் மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று இரவு (06) கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் 11 கைதிகள் காயமடைந்த நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதேபோன்று, இன்று காலை (07) குருவிட்ட சிறைச்சாலையிலும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதன்போது இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைதிகள் குழுவொன்று சிறைச்சாலை மருத்துவமனைக்கும் சேதம் விளைவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், நீர்கொழும்பு – தளுபொத பகுதியில் அமைந்துள்ள பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அங்கு தொடர்ந்து பதற்றமான நிலைமை நீடித்து வருகிறது.

சிறைச்சாலையின் இறுதி வாயிற்கதவுக்கு அருகில் பெருமளவான கைதிகள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

நிலைமை தொடர்ந்து பதற்றமாக காணப்படும் நிலையில், அதிகளவான பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் ஒரே காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த தொடர் சம்பவங்கள் காரணமாக சிறைச்சாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

மஹர சிறைச்சாலையில் இருந்து மாற்றப்பட்ட 10 கைதிகள் பதுளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் நேரடி மேற்பார்வையின் கீழ் விசேட பாதுகாப்புத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறைச்சாலை வளாகத்தில் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Source: https://samugammedia.com/consecutive-blasts-of-tension-high-security-in-mullaitivu-jaffna-and-batticaloa-prisons-1786092374

NO COMMENTS

Exit mobile version