Home இலங்கை அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய சம்பவம்: சமூக ஊடக காணொளி தொடர்பில் விசாரணை

அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய சம்பவம்: சமூக ஊடக காணொளி தொடர்பில் விசாரணை

0
image

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தினுள் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி திசைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ், அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு வெளியே கடமையாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தனது தந்தையை பொலிஸ் அதிகாரிகள் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டி, நபர் ஒருவர் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தினுள் அமைதியற்ற முறையில் நடந்துகொள்வதை காண்பிக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது.

இந்நிலையில், காணொளியில் தந்தை எனக் குறிப்பிடப்படும் முதியவர், கடந்த 24ஆம் திகதி இரவு மதுபோதையில் வீதியில் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டதாகவும், இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த நபர் தப்பிச் செல்ல முயன்றதாகவும், ஓட முடியாமல் கீழே விழுந்ததில் ஏற்பட்ட இரத்தக் கசிவுக்கான அடையாளங்களே காணொளியில் தென்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த நபர் 25ஆம் திகதி அம்பலாங்கொடை பொலிஸ் அதிகாரிகளால் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், அவர் பலப்பிட்டிய மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, குறித்த நபரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பான உண்மை நிலையை கண்டறியும் வகையில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Source: https://samugammedia.com/ambalangkodai-police-station-incident-investigation-related-to-social-media-video-1787724487

NO COMMENTS

Exit mobile version